ஈராக்:ராணுவம் வாபஸ் என்ற பெரும்பொய்

ஆகஸ்ட் 20 ஆம் தேதி அதிகாலை பொழுதிற்கு முன்பு ஈராக்கின் போர் களத்திலிருந்து கடைசி அமெரிக்க ராணுவவீரனும் வெளியேறியிருப்பார் என்று உலகம் முழுவதும் பரப்புரைச் செய்யப்பட்ட செய்தி அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவின் தலைதப்புவதற்கான முதல்தர அக்மார்க் பொய் என்பது வெட்ட வெளிச்சமாகிவிட்டது.

ஜனநாயகத்தின் பாதுகாவலர்கள் என்ற வேடமணிந்துக் கொண்டு அரை லட்சம் படைவீரர்கள் ஈராக்கின் பல ராணுவ முகாம்களிலும் ஆயுதங்களுடன் காத்து நிற்கின்றனர். இது போதாது என்று மேலும் 20 ஆயிரம் பேர் ஜனநாயகத்தை பாதுகாக்க ஈராக்கிற்கு செல்லவிருகின்றார்கள்.

சதாம் ஹுசைன் பேரழிவு ஆயுதங்களை ஒளித்து வைத்திருக்கிறார் என்ற பெரும்பொய்யைக் கூறி மெசபடோமியாவின் மண்ணில் அந்நிய ஆக்கிரமிப்புப்படையினர் காலடி எடுத்து வைத்தனர் என்பதால் அதிபர் ஒபாமாவின் இந்தப் பொய்யைக் குறித்து ஆச்சரியப்படத் தேவையில்லை.

எட்டு ஆண்டுகளுக்கு முன்புதான் தங்களது இலட்சியப்பணி பூரணமடைந்துவிட்டது எனக்கூறி ஒரு விமானத்தாங்கி கப்பலில் அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ்.w.புஷ் எமகாதகனைப் போல் வந்திறங்கினார்.

தடை மற்றும் ஆக்கிரமிப்பினால் ஏறத்தாழ 10 லட்சம் ஈராக் மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஐந்து லட்சம் பேர்கள் அயல்நாடுகளில் அகதிகளாக அவதியுறுகிறார்கள்.

கொல்லப்பட்ட அமெரிக்க படைவீரர்களின் எண்ணிக்கை 4000 தாண்டும். ஆக்கிரமிப்பின் செலவோ கணக்கிடமுடியாத அளவுக்கு.

ஆண்,பெண் சமத்துவத்திற்கும், பொருளாதார சமத்துவத்திற்கும், கல்விக்கும் புகழ்பெற்ற ஒரு தேசத்தை பரிபூர்ணமாக தகர்த்ததில் அமெரிக்க பூரணமாக வெற்றிப் பெற்றிருக்கிறது என்றுக்கூற எவருக்கும் தயக்கமில்லை.

தேர்தல் என்ற கோலாகலத்தின் மூலம் வெற்றிப்பெற்ற கட்சிகளுக்கு கடந்த ஐந்து மாதங்களாக ஒரு அமைச்சரவையை உருவாக்க இயலவில்லை. அமெரிக்க ஆதரவு இல்லையென்றால் அதிபர் நூரி மாலிக்கிற்கு முன்பு ஈரானின் ஷா பஹ்லவி உள்ளதை சுருட்டிக்கொண்டு தேசத்தை விட்டு ஓட்டம் பிடித்தது போன்று செல்லவேண்டியது நேர்ந்திருக்கும்.

முன்பு முஸ்லிம்களாகயிருந்தவர்களை ஷியாக்கள், சுன்னிகள், குர்துக்கள் என பிரித்து மூன்று பிரிவினரையும் ஒருவரையொருவர் மோதவிட்டு நாகரீகத்தின் தொட்டிலை வன்முறைக்களமாக மாற்றியது அமெரிக்காவின் நன்கொடையல்லாமல் வேறென்ன?

ஈராக்கில் குர்த் பகுதியைத் தவிர வேறு எப்பகுதியிலும் வாழும் மக்கள் பாதுகாப்பாக இல்லை.

யுரேனியம் குண்டுகளை அதிகளவில் ஈராக்கில் வீசியதன் பின்விளைவாக புற்றுநோய் உள்ளிட்ட நோய்கள் அங்கு பரவிவருகிறது.

அபுகரீப் போன்ற சித்திரவதைசிறைகளை நம்பித்தான் நூரி மாலிக்கியின் ஆட்சி நிலைக் கொள்கிறது.

ஈராக் ஆக்கிரமிப்பு தவறான முடிவு என வாய்ச்சவாடல் விட்டு ஆட்சிக்கட்டிலில் அமர்ந்த ஒபாமாதான் தனது முன்னாள் அதிபருக்கு சற்றும் இளைத்தவரல்லர் என்பதை நிரூபித்து வருகின்றார்.

குவாண்டனாமோ என்ற சிறைக்கொட்டகையை மூடுவேன் என்பது ஒபாமா பதவியேற்றவுடன் கூறிய இன்னொரு பொய்யாகும். இவையெல்லாம் போர் எதிர்ப்பாளர்களான அமெரிக்க வாக்காளர்களை ஏமாற்றுவதற்கு பயன்படுத்திய தந்திரங்களாகும்.

நம்பிக்கையை அதிகப்படுத்தும் ஒரு ஆசுவாசமான செய்தி என்னவெனில், இரும்புக்கரம் கொண்டு அடக்கி ஒடுக்க பலமுறை முயற்சிச் செய்தும் ஈராக் மக்கள் அந்நிய ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிராக போராட்டத்தை தொடருகிறார்கள் என்பதாகும்.

கடைசி அந்நியப் படைவீரன் ஈராக்கை விட்டு வெளியேறும் வரை போராட்டம் தொடரும் என்பதுதான் யூப்ரட்டீஷும் டைக்ரீஷும் நமக்கு தரும் செய்திகளாகும்.

விமர்சகன்
பாலைவனதூது
Koothanallur Website

Related

muslim country 4214742974697801743

Post a Comment

emo-but-icon

Follow Us

Recent

Hot in week

Archive

SIDE ADS

SIDE ADS

Text Widget

Connect Us

item